ஒக்லஹோமா நகரத் தமிழ்ப் பள்ளி
அய்யா மாசிலாமணி ஆனந்தி மாசிலாமணி
ஓக்லஹோமா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நமது தாய் மொழியான
தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தமிழ் வகுப்புகள் எளிய முறையில்
ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 16 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மட்டுமே இருந்தனர்.வகுப்பறைகள் அமைந்திராத காரணத்தினால் தமிழ்
வகுப்புகள் அய்யா மாசிலாமணி அவர்கள் இல்லம் மற்றும் திரு.விஜயன் ராமச்சந்திரன் அவர்கள் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும்
நடத்தப்பட்டன.
அனைத்து மாணவர்களும் முதல் நிலையில் கற்றுவிக்கப்பட்டார்கள். வகுப்புகள் 2010 முதல் 2012 வரை ஓக்லஹோமா நகர இந்துக் கோயிலில்
நடத்தப் பட்டன. சில குழந்தைகள் தொடர்ந்து தமிழ்க் கல்விப் பயின்று நிலை 2, 3 , 4 மற்றும் 5 சென்றடைந்தனர்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு ஓக்லஹோமா நகரத் தமிழ்ப் பள்ளி அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது. மேலும் அது அமெரிக்கத் தமிழ்க் கழகத்தின்
உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டது. தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாலை 3 :15 முதல் 5 :௦௦ வரை
ஓக்லஹோமா நகரச் சமூகக் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகின்றன. இது நவீன வசதிகள் கொண்ட வகுப்பறை என்பதனால் மாணவ,
மாணவியர்களுக்கு தமிழ்க் கல்விப் பயில மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 19 மாணவ, மாணவியர்கள் மற்றும் 9 ஆசிரியர்களுடன்
தொடங்கப்பட்டு , தற்பொழுது அதில் 23 மாணவ, மாணவிகள் மற்றும் 11 ஆசிரியர்களும் உள்ளார்கள். அமெரிக்கத் தமிழ்க் கல்வி நிறுவனம்
வடிவமைத்துள்ள பாடத் திட்டத்தின் படி வகுப்புகள் மழலை நிலை முதல் நிலை 5 வரை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
ஓக்லஹோமா நகரத் தமிழ்ப் பள்ளி அமெரிக்க வருவாய்த் துறையால் பயன் கருதாத நிறுவனம் என்று 501 (C) (3 ) 2014 ஆம் ஆண்டு சனவரித்
திங்கள் 24 -ந் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.